பத்திரப்பதிவில் முத்திரை தாள்களுக்கு பதிலாக, 'இ-ஸ்டாம்ப்' வசதியை சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
முத்திரை தீர்வை, பத்திரப்பதிவுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், சொத்து விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் மதிப்புக்கு ஏற்ப முத்திரை தாள்களை வாங்கி, அதில் பத்திரங்கள் எழுதப்படும் நடைமுறை உள்ளது. இதற்காக, முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு பதிவுத்துறை உரிமம் வழங்கியுள்ளது. இதற்கு மாற்றாக, 'டிஜிட்டல்' முறையில் இ-ஸ்டாம்பிங் சேவை தொடங்கப்பட்டது.
முத்திரை தீர்வை, பதிவு கட்டண தொகைக்கு முத்திரை தாள் வாங்காமல், அதற்கான தொகையை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி, இ-ஸ்டாம்பிங் சான்றிதழை பெறலாம். இதை பத்திரத்துடன் இணைத்து, பதிவுக்கு தாக்கல் செய்தால் போதும். தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறையை பதிவுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
துவக்கத்தில் சில சார்-பதிவாளர் அலுவலகங்களில் இதற்கான வசதியும் தனி பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த தனி பிரிவுகள் செயல்படுவதில்லை.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
தமிழகத்தில் சொத்து மதிப்புகள் உயர்ந்து வருகின்றன. அதற்கு ஏற்ப, முத்திரை தீர்வை, பதிவு கட்டணமாக செலுத்தும் தொகையின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால், அதிக தொகைக்கு முத்திரை தாள் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, முத்திரை தீர்வை, பதிவு கட்டண தொகையில் ஒரு பகுதிக்கு மட்டும், முத்திரை தாள் வாங்கி, பெரும் பகுதி தொகையை இ-ஸ்டாம்பிங் முறையில் செலுத்த மக்கள் விரும்புகின்றனர். இதற்கான தொகையை மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, ஆன்லைன் முறையில், இ-ஸ்டாம்ப் வழங்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்."
தற்போது, ஆவண எழுத்தர் அலுவலகங்களில் இருப்பவர்கள் இதை கமிஷன் அடிப்படையில் செய்து கொடுக்கின்றனர். புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில், பதிவு அலுவலகத்திலேயே இ-ஸ்டாம்ப் வழங்கும் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதற்கென தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், 5 ரூபாய் முதல் பல்வேறு தொகைக்கு இ-ஸ்டாம்ப் வாங்க முடிகிறது. எனவே, தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் இ-ஸ்டாம்ப் வழங்க, தனி பிரிவுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்." எனக் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரப்படி, 'ஸ்டாக் ஹோல்டிங்' என்ற நிறுவனம் வாயிலாக இ-ஸ்டாம்ப் வழங்கப்படுகிறது. இதன் இணையதளத்தில் பதிவு பெற்ற முகவர்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி, தேவையான மதிப்புக்கு இ-ஸ்டாம்ப் பெறலாம்.

0 Comments