10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், "RCB அணி கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே" என்று குறிப்பிட்டு https://ipl-25-racharget2.blogspot.com/ என்ற இணையதள முகவரி ஒன்று வாட்சாப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, உண்மையில் JIO, Vi மற்றும் Airtel 3 மாதங்கள் இலவச ரீசார்ஜாக ரூ. 749 - ஐ அனைத்து இந்தியர்களுக்கும் அறிவித்துள்ளதா என்பது குறித்து தேடியதில், இது குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லை.
மேலும் பரவி வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியை கிளிக் செய்த போது , டொமைன் இடைநிறுத்தப்பட்டுள்ளது அல்லது உள்ளமைக்கப்படவில்லை என்று பதில் கிடைத்தது.
இதே போல் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதும், ரூ. 749 -க்கு 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் என்று சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து அப்போதே ஆய்வு செய்து, youturn தரப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் பணத்தை இழந்திருந்தால், "1930" என்ற "சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்" மூலமாகவோ, www.cybercrime.gov.in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான ஃபிஷிங் இணையதளங்களை தவிர்ப்பதும் நல்லது.
முடிவு :
"RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன" என்று கூறி WhatsApp-இல் பரவி வரும் செய்திகள் தவறானவை.
0 Comments