முதல்வரின் முகவரி திட்டம் (Mudhalvarin Mugavari Thittam) என்பது முதல்வரின் உதவி மையம், முதல்வரின் தனிப்பிரிவு, ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (IIPGCMS), உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகிய நான்கு துறைகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டு உள்ள சிறப்புவாய்ந்த துறை ஆகும்.
இந்த புதிய திட்டத்தை 24 நவம்பர் 2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். முதல்வரின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த புதிய துறையில் பொதுமக்கள் இருப்பிடத்தில் இருந்துக் கொண்டு முதல்வருக்கே நேரடியாக மனு அளிக்கலாம். இதற்காகவே, முதல்வரின் முகவரி இணையதளம் (Mudhalvarin Mugavari Portal) உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி திட்டத்தின் குறிக்கோள்
அனைத்து சாமானிய மக்களுக்கும் தமிழக அரசின் சேவைகள் முறையாகவும் எளிமையாகவும் கிடைக்க வேண்டும் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்த முதல்வரின் முகவரி திட்டத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் முக்கிய நன்மைகள்
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இந்த புதிய துறை செயல்படுவதால், முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இயங்கிக் கொண்டிருக்கும். ஆதலால், இங்கு வரக்கூடிய மனுக்களும் கோரிக்கைகளும் விரைந்து தீர்க்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள், மனுக்கள் மற்றும் புகார்களை வீட்டில் இருந்தபடியே ஒரே ஒரு நிமிடத்தில் ஆன்லைன் மூலம் கொடுக்க முடியும்.
முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீர்வு காண்பதற்காக, ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு https://cmhelpline.tnega.org/ மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இணையதளம் மூலமாக மனுதாரர்கள் குறைகளை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் குறைகளை பதிவு செய்யலாம்.
மனுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, மனுக்கள் குறித்த தகவல்கள், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மனுக்களின் நிலை என்ன என்பது குறித்த அனைத்து விதமான தகவல்களும் இந்த இணையதளத்தின் மூலம் புகார் அளித்தவர்கள் தெரிந்துக் கொள்ள முடியும். வருடத்திற்கு ஒருவர் சுமார் ஐம்பது மனுக்களை கொடுக்கலாம். இதற்காக கட்டணங்கள் ஏதும் கிடையாது.
ஒருவேளை உங்களால் இணையதளம் மூலமாக புகார் பதிவு செய்ய முடியவில்லை என்றால், 044-2567 1764 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், 044-2567 6929 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் மூலமாகவோ அல்லது cmcell@tn.gov.in என்ற இ-மெயில் மூலமாகவோ கூட புகாரை அனுப்பி வைக்கலாம்.
முதல்வரின் முகவரி துறையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும் அலுவலர்கள் ஆகியோர் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குகிற ஒருங்கிணைப்புத் துறையாக பொதுத்துறை செயல்பட்டு வருகிறது. பொதுத் குறைதீர்ப்பு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் ஹெல்ப்லைன், தகவல் அழைப்பு மையம், 1100 என்ற உதவி எண் ஆகியவை மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களைப் பதிவு செய்வதற்காகவும் இதர பணிகளுக்காகவும் முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கி வருகிறது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் புகார் மனுக்களை அளிக்க, மனுதாரர் முதலில் https://cmhelpline.tnega.org/portal/en/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பின்னர், இணையதளத்தின் ஹோம்பேஜில் Sign Up அல்லது My Dashboard என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மொபைல் எண்ணை கொடுத்து Sign Up செய்துக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து, ஒரு ஆன்லைன் படிவம் தோன்றும்.
அவற்றை எந்தவொரு பிழையும் இல்லாமல் தெளிவாக பூர்த்தி செய்து, உங்களுடைய புகார் மனுவை எழுதி, மனு தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அதை பதிவேற்றம் செய்து இறுதியாக Submit கொடுக்கவும். அவ்வளவு தான், உங்களுடைய மனு வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், உங்களுடைய மொபைல் எண்ணிற்கும் ஒரு Referral எண் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி உங்களுடைய மனுவின் நிலையை இதே இணையதளத்தின் மூலமே தெரிந்துக் கொள்ள முடியும்.
முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு
அனுப்புநர்:
(உங்களுடைய பெயர்),
(உங்களுடைய முகவரி),
(உங்களுடைய தொலைபேசி எண்),
(உங்களுடைய மின்னஞ்சல் முகவரி)
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009
பொருள்: (உங்களுடைய கோரிக்கையின் தலைப்பு சுருக்கமாக)
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
என்னுடைய பெயர் (உங்களுடைய பெயர்), நான் (உங்களுடைய ஊர்) என்ற பகுதியில் (வசித்த வந்த ஆண்டு) ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கோரிக்கை என்னவென்றால், (உங்களுடைய கோரிக்கையை தெளிவாக விளக்கவும்). கோரிக்கை சம்பந்தமான ஆதாரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை (உதாரணத்திற்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், நில ஆவணங்கள் போன்றவை) இணைக்கவும். ஆகையால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, எனக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
(உங்களுடைய கையொப்பம்)
(உங்களுடைய பெயர்)
(நாள்)
(இடம்)
0 Comments