UPI செயலி மூலம் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை சரிபார்க்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வந்தது. இதன் பலனாக சாலையோர சிறு, குறு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகள் தொடங்கி பெட்ரோல் பங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், ஆன்லைன் டெலிவரி சேவைகள், கல்விக்கட்டணம் செலுத்துவது, பணப்பரிமாற்றம், ஊதியம் பெறுவது, EMI செலுத்துவது என அனைத்துமே டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக மாறிவிட்டன. இதனால் கையில் சில்லறை இல்லை, ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும், பணத்தை தவறவிடுவது போன்ற பிர்ச்சனைகள் இருப்பதில்லை.
அதிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்துவது பலருக்கும் எளிமையான ஒன்றாக உள்ளது. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆகியவற்றை விட யுபிஐ மூலம் பரிவர்த்தனை எளிமையாக இருப்பதால், ஓரளவிற்கு ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த தெரிந்தவர்கள் கூட எளிமையான பணப்பரிவர்த்தனை செய்ய முடிகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை 25 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகம் மக்களை ஈர்த்து வரும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய விதிகளை தேசிய பணப் பரிவத்தனைக் கழகம் கொண்டுவந்துள்ளது.
அதன்படி இதுவரை கூகுள் பே, ஃபோன்பே போன்ற யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைக்கான நேரம் 30 வினாடியில் இருந்து 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் கழிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும் 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை யுபிஐ செயலிகள் மூலம் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் என்றும், நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்கவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் NPCI தெரிவித்துள்ளது.
0 Comments