இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதிகள் என்ன.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Follow Us

இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதிகள் என்ன.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

 தமிழ்நாடு அரசின் சார்பின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது.

                                                                        


தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வீடு, மனைகளுக்கான பட்டா வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.


தமிழ்நாடு அரசின் இலவச பட்டாவை பெறுவதற்கு சில தகுதி வரம்புகள் உள்ளது. அவை என்னவென்றால், பட்டா பெற விண்ணப்பிப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தில் வசிப்பதில் எவ்விதமான சிக்கலும் இருக்கக்கூடாது. அதாவது எவ்விதமான ஆட்சேபனையும் யாரும் தெரிவிக்கக்கூடாது. விண்ணப்பத்தாரர் வசிக்கும் நிலங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு அல்லது நத்தம் இடங்களில் இருக்க வேண்டியதும் கட்டாயம்.


மேலும் நீர் நிலைகள், கால்வாய், கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலவச பட்டா பெறும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் ரூ. 5 லட்சம் என உயர்த்தப்பட்டது. மேலும், ஆட்சேபனையற்ற நிலத்தில் 10 ஆண்டுகள் வசித்ததுக்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். இலவச பட்டாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்.


இதனையடுத்து எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றால் பட்டா வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 சென்ட் நிலத்துக்கு பட்டா கிடைக்கும். கிராமப்புறங்களில் 2 முதல் 2.5 வரை மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் 1.25 முதல் 1.5 சென்ட் வரை பட்டா வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் புறம்போக்கு நிலங்களுக்கு வழங்கப்படும் இந்த பட்டாவை அடகு வைக்கவோ, விற்கவோ முடியாது என்பதை கவனித்து கொள்ள வேண்டும்.


இதனிடையில் சென்னை போன்ற பெருநகரம், பிற மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வித ஆட்சேபனையும் இல்லாத அரசின் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட இருக்கிறது. 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பட்டா வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இலவச வீடு மனை பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு கட்டி வாழ்வதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ கிடைக்கும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் வட்டாசியரிடம் வழங்க வேண்டும்

Post a Comment

0 Comments