Tamilnadu 10th and 11th Grade School Students Scholarship: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர். புதிதாக வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல் நாளே இன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வரும் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து பார்க்கலாம்.
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை
அதாவது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ்மொழி திறனாய்வுத்தேர்வு (Tamil Talent Exam), தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (Chief minister talent exam)என்ற 2 சிறப்பு தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும்.
தேர்வு எப்படி இருக்கும்?
இந்த திறனாய்வு தேர்வை எழுதிய பின் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் இடஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.1,000 என ஒரு கல்வியாண்டில் ரூ.10,000 வழங்கப்படும். இந்த திறனாய்வு தேர்வுகள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் இரு தாள்களாக நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
முதல் தாளில் கணிதத்தில் 60 வினாக்கள், 2ம் தாளில் அறிவியல், சமூக அறிவியலில் 60 வினாக்கள் என இரண்டு பருவங்களாக தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50ஐ சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கலாம். இந்த திறனாய்வு தேர்வுகளுக்கான தேதி தலைமையாசிரியரால் அறிவிக்கப்படும்.
11ம் மாணவர்களுக்கு ரூ.1,500
இதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ்மொழி திறனாய்வுத்தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments