புதிதாக இடம் வாங்கும் போது புரோக்கர்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரே ஒரு மொபைல் ஆப் போதும்.. எப்படி?

 

புதிதாக இடம் வாங்கும் போது இடத்து புரோக்கர்களிடம் ஏமாறாமல் இருக்க கண்டிப்பாக சில வழிகளை சரியாக பின்பற்ற வேண்டும்..

எல்லா புரோக்கரும் ஏமாற்றுபவர்கள் கிடையாது. ஒரு சிலர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தவறான இடத்தை காண்பிக்கிறார்கள். சிலர் சிக்கான இடத்தை தலையில் கட்டிவிட்டு செல்கிறார்கள். இடம் வாங்கும் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க ஒரே ஒரு ஆப்பை உங்கள் மொபைல் இன்ஸ்டால் செய்தால் போதும். முழு விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

                                                                               


டாப் இன்பார்மர் என்ற சமூக வலைதளப்பக்கத்தில், புதிதாக இடம் வாங்கும் போது புரோக்கர்களிடம் ஏமாறாமல் இருப்பது பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில், புதிதாக இடம் வாங்கும் போது புரோக்கர்களிடம் ஏமாறாமல் இருக்க ஒரே ஒரு மொபைல் ஆப் போதும். உங்களை யாராலும் ஏமாற்றவே முடியாது.

சர்வே நம்பர்

பொதுவாக இடத்து புரோக்கர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்றால், உங்களுக்கு இடத்தை காட்டும் போது, ரோட்டிற்கு மேல் உள்ள இடத்தை காட்டுவார்கள்.. ரோட்டுக்கு மேல் இடம் இவ்வளவு கம்மியாக கிடைக்கிறதே என்று எண்ணி மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.. ஆனால் பத்திரம் முடிக்கும் போது என்ன நடக்கும் தெரியுமா? எங்கயோ உள்ள கிடக்கும் இடத்தின் சர்வே நம்பரை போட்டு உங்கள் பெயரில் பத்திரத்தை முடித்துவிடுவார்கள். நீங்கள் பத்திரம் முடித்த கையோடு, புரோக்கர் காட்டிய அந்த இடத்தில் வேலி போட ஆரம்பிப்பீர்கள்.. குறைச்ச விலையில் கிடைக்குதே என்று நீங்கள் ஆசைப்பட்டு ஏமாந்தது அப்போது தான் உங்களுக்கு தெரியும்.

தமிழ்நிலம் ஆப்

அதனால் ஒரு இடத்தை புதிதாக வாங்கும் போது, அந்த இடத்தை பற்றி விஷயம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அந்த சில விஷயங்களையும் புரோக்கரிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொண்டால், சில நேரங்களில் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது (எல்லா புரோக்கர்களும் இப்படி ஏமாற்ற மாட்டார்கள்.. யாராவது ஒரு சிலரே ஏமாற்றக்கூடும்). அதனால் ஏமாறாமல் இருப்பதற்கு தமிழ் நிலம் என்ற ஆப்பை (TamilNilam Geo-Info) டவுன்லோடு செய்தால், உங்களிடம் தப்பான தகவல் சொல்லுபவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

நிலத்தின் உரிமையாளரை அறிவது எப்படி

முதலில் வாங்க போகும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுங்கள்..அங்கு மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட TamilNilam Geo-Info ஆப்பில் லாக் இன் செய்யுங்கள். அதன்பிறகு லெப்ட் சைடில் கீழே வட்டவடிவிலா புள்ளி இருக்கும். நீங்கள் அந்த புள்ளியை தொட்ட உடனே, மேப்பில் நீங்கள் நிற்கும் இடத்தை புளு கலரில் புள்ளி போல் காட்டும். அப்போது மேப்பை நான்கு ஜூம் செய்து இடத்தை பாருங்கள். பின்னர் புளூ கலர் பாயிண்டை திரும்ப தொட்டால் 30 செக்ண்டுகள் கழித்து, ஸ்கிரீனில் தெரிவது போல் தனியாக ஹைலைட்டாக காட்டும். அதன்பிறகு கீழே உள்ள ஏ ரிஜிஸ்டர் என்பதை தொட வேண்டும். அதனை தொட்டால், ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் நிற்கும் இடம், எந்த மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் யார் பெயரில் உள்ளது. ஓனரின் விவரம் மற்றும் சர்வே எண் மற்றும் சப் டிவிசன் விவரமும் போட்டிருக்கும்.

நில அளவை கணக்கிடுவது எப்படி

அதன்பிறகு உடனே பேப்பரை எடுத்து எல்லா விவரங்களையும் எழுதிக் கொள்ளுங்கள்.. அதில் extent in areas என்று கீழே இருக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலத்தினை அளவை 2.47 ஆல்பெருக்க வேண்டும். இதனை பெருக்கினால் நிலத்தின் அளவு என்ன என்று தெரியும். (உதாரணமாக 10.5 என்று இருந்தால், 2.47 ஆல் பெருக்க வேண்டும். அதனை பெருக்கினால் 25 .935 என்று வரும்) அதாவது நிலம் எத்தனை சென்ட் என்று தெரியும். இந்த அளவினையும் பேப்பரில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அப்படியே அதே லிஸ்டில் கீழே பார்த்தால் பட்டா எண் என்று ஒன்று போட்டிருக்கும். அந்த நம்பரையும் பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. அதன்பிறகு சிவப்பு கலரில் உள்ள குளோஸ் பாக்ஸை வைத்து மூடுங்கள். பின்னர் பழையபடி மேப்பும் கீழே தகவலும் காட்டும்.

தனிப்பட்டா உள்ளதா

அதில் பட்டா நம்பரை தொடுங்கள்... அதில் ஸ்கிரீன் ஒன்று ஓபன் ஆகும். அதில் பட்டா எண்ணை பதிவிட வேண்டும். அதன்பிறகு சர்ச்சை கிளிக் செய்தால் பட்டா ஓபன் ஆகும். அந்த பட்டாவில் நீங்கள் பார்க்க வேண்டிய விஷயம்.. நிலத்தின் உரிமையாளர் என்று காட்டியது அல்லவா, அந்த பெயரில் பட்டா உள்ளதா என்பதை பாருங்கள்.. இந்த பெயர் இருந்தால் தனிப்பட்டா இருக்கிறது என்று அர்த்தம். இல்லை.. அந்த பெயருடன் 4 பேர் பெயரும் இருந்தால், கூட்டு பட்டாவாக இருக்கும்.அவர்களிடம் தனிப்பட்டா வாங்க சொல்லுங்கள். தனிப்பட்டா நிலத்தை வாங்கினால் வருவாய் துறை அலுவலகமே போகத் தேவையில்லை.. அப்படியே தானாகவே உங்கள் பெயரில் பட்டா மாறிவிடும்.

சர்வே எண் மற்றும் நில அளவுகள்

பின்னர் பட்டா பக்கத்தை மூடிவிட்டு, அதன்பிறகு எப்எம் ஸ்கெட் என்பதை தொடுங்கள். அதில் வாங்கக்கூடிய நிலத்தின் புல வரைப்படம் ஸ்கிரீனில் தெரியும். இந்த வரைப்படத்தில் உள்ள விஷயங்களையும் பேப்பரில் எழுதி கொள்ளுங்கள். உங்கள் இடத்தை சுற்றி நான்கு பக்கமும் என்னென்ன சர்வே நம்பர் உள்ளது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது வடக்கு பக்கம் சர்வே எண் என்ன, கிழக்கு பக்கம் சர்வே எண் என்ன, மேற்கு பக்கம் சர்வே எண் என்ன, தெற்கு பக்கம் சர்வே எண் என்ன என்பதை தெளிவாக எழுதி கொள்ளுங்கள். அதன்பிறகு நான்கு பக்கமும் உங்களுக்கு அளவு எவ்வளவு எவ்வளவு என்பதையும் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

பத்திரம் ஜெராக்ஸ்

இதன்பிறகு ஒரே ஒரு விஷயத்தை செய்தால் போதும், நீங்கள் புரோக்கர் உள்பட யாரிடமும் ஏமாற மாட்டீர்கள்.. அது என்னவென்றால், அதே தமிழ்நிலம் ஆப்பில் உங்கள் இடத்தை சுற்றியுள்ள சர்வே நம்பரில் உள்ள நிலங்களின் ஓனர் யார் என்ற விவரத்தை அறிந்து கொள்ளுங்கள். இறுதியாக நிலத்தை காட்டிய புரோக்கரிடம் பத்திர ஜெராக்ஸை கேளுங்கள். பத்திர ஜெராக்ஸில் நீங்கள் ஆப்பில் பார்த்த விவரங்கள் எல்லாமே (வரைபடம், நில அளவு, ஓனர் விவரம்) சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள். அப்படி பத்திரத்தில் இல்லாவிட்டால், என்னென்ன விவரங்கள் தவறாக உள்ளதோ, அதனை திருத்த சொல்லுங்கள்.. திருத்திய பிறகு வாங்கி வெரிபிகேசன் செய்யுங்கள். இறுதியாக நிலத்தில் வில்லங்கம் இல்லை என்றால் வாங்க முடிவெடுக்கலாம்.

Post a Comment

0 Comments