பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தபால் துறை பல சேமிப்புத் திட்டங்களை இயக்கி வருகிறது.
அதில் மிகவும் பிரபலமானதும் பயனுள்ளதுமான திட்டம் தான் மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme – MIS). இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வட்டி வருமானத்தை பெறலாம். ரிஸ்க் இல்லாத இந்த திட்டம் குறைந்த முதலீட்டில் தொடங்கி நிதி பாதுகாப்பை நாடுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
முதல் முதலீடு வெறும் ரூ.1000 முதல் தொடங்கலாம். தபால் நிலையத்தில் எளிதாக கணக்கைத் திறக்க முடியும். தேவையான அடையாள ஆவணங்கள், புகைப்படம், மற்றும் முகவரி நிரூபணத்துடன் சமர்ப்பித்து, கணக்கு ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில் ஒற்றை நபராகவும், இரண்டு அல்லது மூன்று நபர்களாக கூட்டுக் கணக்காகவும் பதிவு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தனியாகவே கணக்கு தொடங்க முடியும். மைனர் பெயரில் பாதுகாவலர் மூலமாகவும் கணக்கை நடத்தலாம்.
ஒரு தனி நபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். கூட்டுக் கணக்கில் முதலீடு செய்த தொகையில் அனைவருக்கும் சம பங்கு இருக்கும். மைனர் கணக்குகளுக்கான முதலீட்டு வரம்பு வேறுபடும்.
தற்போது இந்த திட்டம் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி மாதம் தோறும் வழங்கப்படும். கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்ததும் முதல் வட்டி வரவு கைவசம் வரும். மேலும், முதிர்வு வரை அதே வட்டி தொகை கிடைக்கும். வட்டி தொகையை வாங்க மறந்தாலோ, அதை மேலும் சேர்த்துவைத்து வட்டி பெற முடியாது.
மாதாந்திர வட்டியை, அதே தபால் நிலையத்தில் உள்ள சேமிப்புக் கணக்கில் ஏற்கனவே வைத்திருந்தால், அதில் நேரடியாக செலுத்தும் வசதி உள்ளது. அல்லது ECS (Electronic Clearing Service) மூலம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. CBS (Core Banking System) உள்ள தபால் நிலையங்களின் வாயிலாக, நீங்கள் வங்கிக்கணக்கை எங்கிருந்தும் பராமரிக்க முடியும்.
இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்ததும், அதை மூட முடியும். அதற்கான விண்ணப்ப படிவத்துடன் பாஸ்புக்கை சமர்ப்பிக்கவேண்டும். இருப்பினும், முதலீட்டு தேதியிலிருந்து 1 வருடத்திற்குள் பணத்தை திரும்ப பெற முடியாது. 1 ஆண்டுக்குப் பிறகு, ஆனால் 3 ஆண்டுக்குள் கணக்கை மூடினால், அசல் முதலீட்டில் 2% கழித்து மீதமுள்ள தொகையை பெறலாம்.
இந்த மாதாந்திர வருமானத் திட்டம், ஒவ்வொரு மாதமும் ஒரு உறுதியான வருவாயை தேடும் மக்களுக்கு மிகவும் நம்பகமான நிதி திட்டமாக அமைந்துள்ளது. எந்தவித ஆபத்தும் இல்லாமல் உத்தரவாத வருமானம் பெற விரும்புவோர் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.
0 Comments