ரிஸ்க் இல்லாத முதலீடு... 7.7% வட்டி; இந்த அரசு திட்டத்தை நோட் பண்ணுங்க மக்களே!

 தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate - NSC) என்பது இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும்.

இது நிலையான வருமானத்தை வழங்குகிறது. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத, சிறு முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் ஏற்றது. இது 1989 மே மாதம் தொடங்கப்பட்டது.

                                                                              


தேசிய சேமிப்பு சான்றிதழ் கணக்கை குறைந்தபட்சம் ரூ. 1,000 டெபாசிட் செய்து எந்த அஞ்சல் அலுவலகத்திலும் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்படும். இந்த சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்குகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறுகிறார்கள்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், பழைய வரி முறையின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். இதில் இருந்து பெறப்படும் வட்டிக்கு "பிற வருமானங்கள்" என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக, தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது முதலீடு மற்றும் வரி சேமிப்பு என்ற இரட்டை நன்மைகளைக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 7.7% கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டாலும், முதிர்வு நேரத்தில் மட்டுமே வழங்கப்படும். திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு, அது தானாகவே புதுப்பிக்கப்படாது. 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் முதலீடு செய்ய விரும்பினால், சந்தாதாரர் தற்போதுள்ள வட்டி விகிதத்தில் புதிய தேசிய சேமிப்பு சான்றிதழை வாங்க வேண்டும்.

நீங்கள் எத்தனை சான்றிதழ்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தக் குறிப்பில், ரூ. 15 லட்சத்தை ஒரு முறை முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை ஒரு கணக்கீட்டின் மூலம் பார்ப்போம்.

ரூ. 15 லட்சம் முதலீட்டில் 5 ஆண்டுகளில் தேசிய சேமிப்பு சான்றிதழ் வருமானம்:

ஒரு முறை டெபாசிட்: ரூ. 15 லட்சம்

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.7% (கூட்டு வட்டி)

காலம்: 5 ஆண்டுகள்

முதிர்வுத் தொகை: ரூ. 21,73,551

வட்டி வருமானம்: ரூ. 6,73,551

ஆக, ரூ. 15 லட்சத்தை ஒரு முறை முதலீடு செய்திருந்தால், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் ரூ. 21.73 லட்சமாக அதிகரித்திருப்பதை நாம் பார்த்தோம்.

வருமான வரி அறிக்கையில் (ITR) தெரிவிப்பது எப்படி?

உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தில் இருந்து பெறப்பட்ட வட்டி வருமானத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), ஆண்டுதோறும் திரட்டப்பட்ட வட்டியை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

Post a Comment

0 Comments