மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயிரத்து 200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சட்டப்பேரவையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மறைந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, 2 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டதாகவும், ஆனால், இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறினார்
மேலும், ஆட்டிசம், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்காக 1200 பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணி நடைபெற்று வருவதாக பதில் அளித்தார்.
0 Comments