சென்னை: தற்போது டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சம்பா, தாளடிப் பருவங்களில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரங்களை உழவர் செயலி மூலம் வாடகைக்குப் பெற்றுப் பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசின் வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாட்டில் நடப்பு சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் நெற்பயிர் 35.16 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ஆம் ஆண்டைவிட 2.2 இலட்சம் ஏக்கர் கூடுதலாகும்.
டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் 13 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒரு இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். தற்போது பரவலாக நெல் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில், விவசாயிகளின் தேவைக்கேற்ப உரிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு. நெல்கொள்முதலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைத்திடவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காலத்தே அறுவடை செய்திடவும். வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தனியார் மூலம், மொத்தம் 4,505 நெல் அறுவடை இயந்திரங்களையும் 51 வைக்கோல் கூட்டும் கருவிகளையும் 51 வைக்கோல் கட்டும் கருவிகளையும் "உழவர் செயலி" இல் உள்ள சேவைகள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே. நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், உழவர் செயலியில் உள்ள விவரங்களை கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*ஆண்ட்ராய்டு கைபேசியில், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து "உழவர் செயலியைப்" பதிவிறக்கம் ( டவுன்லோட்) செய்து நிறுவிக் கொள்ள வேண்டும் ( இன்ஸ்டால்) * செயலியில் கேட்கப்படும் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்து கொள்ளுதல் (முதல்முறை மட்டும்). *வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு" என்ற மெனுவை கிளிக் செய்து, அதிலுள்ள "தனியார் இயந்திர உரிமையாளர்கள் பற்றி அறிய" என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும்
* தனியாரால் வாடகைக்கு விடப்படும் "Combine Harvester / அறுவடை இயந்திரங்கள்" என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும் * அடுத்து வரும் திரையில், விவசாயிகள் தமது மாவட்டத்தினையும். வட்டாரத்தினையும் தேர்வு செய்து, "SEARCH / தேடுக" என்ற சிவப்பு வண்ணக் கட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அவ்வட்டாரத்தில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்குவிடத் தயாராக உள்ள உரிமையாளர்களின் பெயர், கைபேசி எண், நெல் அறுவடை இயந்திரத்தின் மாடல் உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்படும். அப்பட்டியலிலிருந்து, தங்களுக்குத் தேவையான தனியார் நெல் அறுவடை இயந்திரத்தின் உரிமையாளரின் கைபேசி எண்ணை கிளிக் செய்தால், உரிமையாளரின் கைபேசிக்கு நேரடியாக அழைப்பு செல்லும். இயந்திர உரிமையாளருடன் நேரடியாக கைபேசி மூலம் கலந்துரையாடி, நெல் அறுவடை இயந்திரத்தினை விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது, ஒருவேளை தங்கள் வட்டாரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கவில்லையெனில், அம்மாவட்டத்திலேயே உள்ள பிற வட்டாரங்களிலோ அல்லது பிற மாவட்டங்களில் உள்ள ஏதேனுமொரு வட்டாரத்திலோ மேலே குறிப்பிடப்பட்ட முறையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், 4,505 நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://aed.tn.gov.in/ta/harvester// மூலமாக அறிந்து கைபேசி மூலம் தொடர்பு கொண்டும் பயனடையலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக அலைபேசி எண் 8838224538 ஐ தொடர்பு கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.

0 Comments