பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ அடிப்படையிலான திட்டம், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம். உங்களுடைய ஒரு சிறிய முதலீடு மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன், வாழ்நாள் முழுவதும் மாதம்தோறும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்
2019ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டம்
கடந்த 2019 பிப்ரவரி மாதத்தில், அரசாங்கம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கானது. தெரு வியாபாரிகள், ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் இதன் மூலம் பலன் அடையலாம்.
வருமான ஆதாரம் இல்லாத போது கை கொடுக்கும் திட்டம்
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் முதுமையில் கடுமையான சிக்கலை எதிர்கொள்கின்றனர். சம்பாதிக்கும் வயது முடிந்து உடல் பலவீனமடைந்த பிறகு, அத்தகையவர்களுக்கு வருமான ஆதாரம் இல்லாத போது இந்த திட்டம் கை கொடுக்கும். இதுவரை, நாடு முழுவதும் 46,29,664 க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
ரூ,3,000 மாத ஓய்வூதியத்தை உறுதி செய்யும் திட்டம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) 60 வயதுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு ரூ,3,000 மாத ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இந்தத் திட்டம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் உள்ள தொழிலாளர்களுக்கானது. அதாவது, அமைப்புசாரா துறையில், ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட 18 முதல் 40 வயதுடைய தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய தகுதியற்றவர்கள்?
மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு Shram Yogi Maandhan Yojana திட்டத்தின் பலன் கிடைக்காது. இது மட்டுமல்லாமல், வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது EPFO, NPS அல்லது ESIC உறுப்பினர்களாக இருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதியற்றவர்கள்.
PM-SYM திட்டத்தில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும்?
தொழிலாளி தனது வயதுக்கு ஏற்ப மாதாந்திர பங்களிப்பைச் செய்ய வேண்டும். தொழிலாளி பங்களிக்கும் அதே தொகையை அரசாங்கம் கணக்கில் டெபாசிட் செய்யும். உதாரணமாக, தொழிலாளி மாதத்திற்கு ரூ.500 டெபாசிட் செய்தால், அரசாங்கமும் தன் தரப்பில் இருந்து ரூ.500 டெபாசிட் செய்யும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடு செய்யப்படும்.
இளம் வயதில் சேரும்போது கிடைக்கும் அதிக நன்மைகள்
PM-SYM திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நீங்கள் இளம் வயதில் சேரும்போது, அதிக நன்மைகள் கிடைக்கும். 18 வயது நிரம்பிய ஒருவர் இதில் சேர்ந்தால், அவர் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். அதே சமயம் 40 வயது நிரம்பியவருக்கு, மாதாந்திர பங்களிப்பு 200 ரூபாயாக மாறும். 29 வயதில் சேர்ந்தால் பங்களிப்பு ரூ.100 மட்டுமே. மாதாந்திர பங்களிப்பு பயனாளியின் வயதைப் பொறுத்தது. இது ரூ.55 முதல் ரூ.200 வரை மாறுபடும். இந்தத் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
PM-SYM திட்டத்தில் இணைவதற்கான வழிமுறை
இந்தத் திட்டத்தில் இணைய அருகிலுள்ள CSC அல்லது ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர, ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு மட்டுமே தேவை. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் திறக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் இந்தத் திட்டத்திற்கு செல்லுபடியாகும். உங்கள் கணக்குடன் IFSC தகவலை வழங்கினால் போதும். செயல்முறை முடிந்ததும், CSC-யிலிருந்தே நீங்கள் Shram Yogi ஓய்வூதியக் கணக்கு எண் மற்றும் Shram Yogi அட்டையைப் பெறுவீர்கள்.
மனைவிக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியம்
பயனாளி இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் கிடைக்கும். பயனாளி 10 ஆண்டுகளுக்குள் திட்டத்திலிருந்து வெளியேறினால், அவரது பங்களிப்பு சேமிப்பு வங்கி வட்டி விகிதத்துடன் திரும்பப் பெறப்படும். திட்டத்தில் சேர்ந்த பிறகு, பயனாளிக்கு Shram Yogi அட்டை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் LIC மற்றும் CSC மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://maandhan.in/.
0 Comments