புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, முதல் நான்கு நாட்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அரசின் குழுக்களுக்கு உத்தரவு:
அரசு தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையைச் சரிபார்க்க அரசாங்கம் ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை திரையரங்குகள் வசூலிப்பது பார்வையாளர்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்டால், அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஓ.டி.டி. வளர்ச்சிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும்:
மேலும், நீதிபதி தனது கருத்தில், இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் பார்க்கும் போது வாங்கி உண்ணும் பாப்கார்ன் கூட வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிலை இருப்பதையும், ஓ.டி.டி. தளங்களில் திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகள் அதிக காலம் நீடிக்காது என்பதையும் திரையரங்கு உரிமையாளர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
0 Comments