ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு அளிக்க பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மனிதர்களை போன்றே விலங்குகளின் நலனை பேணிக் காப்பதும் நம் ஒவ்வொருவருடைய கடமை. "தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்" தோற்றுவிக்கப்பட்டு, சமூக விலங்குகளுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாரியமானது தமிழகத்தில் உள்ள பிராணிகளின் நலன் குறித்த பிரச்னைகளை கண்காணித்து தீர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் உரிமையாளர்களால் வளர்த்து கைவிடப்பட்ட விலங்குகள் மற்றும் ஆதரவற்ற சமூக விலங்குகளான (பசுக்கள், நாய்கள், பூனைகள், குதிரைகள்) போன்றவற்றிற்கும் உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி வழங்குவதற்கும், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட விலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் மனிதர்களுக்கு ஏற்படும் விபத்துகள், விலங்குகளால் விலங்குகளுக்கு ஏற்படும் பிணக்குகள், விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிணக்குகளில் இருந்து பாதுகாக்க அவற்றிக்கு உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி வழங்கிட இந்த வாரியத்தால் மட்டுமே இயலாது.
எனவே, இச்சேவையை சிறப்பாக செயல்படுத்திட, விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டிட தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி, தி.நகர், சென்னை கிளையில், ஒரு தனி வங்கி கணக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள், ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் இந்த உன்னத திட்டத்திற்கு மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் தாராளமாக நிதி உதவி வழங்கலாம்.
வங்கி கணக்கு விவரங்கள்.
1. கணக்கின் பெயர் : TNAWB Animal Care Foundation
2. கணக்கு எண் : 44153955721
3. வங்கி பெயர் : SBI வங்கி
4. கிளை : தி.நகர் கிளை, சென்னை
5. IFSC குறியீடு : SBIN0001020
6. MICR குறியீடு : 60002054
வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை, "TNAWB Animal Care Foundation" என்ற பெயரில் எடுத்து, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்/ இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள், 571, அண்ணா சாலை, சென்னை -35, என்ற முகவரிக்கு அனுப்பிடலாம். நன்கொடையாகப் பெறப்படும் தொகை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தினால் அந்தந்த பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் தேவைக்கேற்ப வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்காக உணவு பண்டங்கள் வாங்கி விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும்.