தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ.336 ஆக நிர்ணயம் செய்து மத்தியஅரசு கடந்த மே மாதம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் இந்த புதிய ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில், நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர். மேலும் இந்த தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.17 கூடியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து, தமிழகத்துக்கு 100நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டி சம்பளத்திற்காக, முதல்கட்டமாக ரூ.920 கோடியை மத்திய அரசு கடந்த மாதம் விடுவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், உயர்த்தப்பட்ட ஊதியம் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்பேரில் தமிழகத்தில் பயனாளிகளுக்கான தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments