சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என 308 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதியான பெண்கள் ஏப்ரல் 23, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
Anganwadi worker recruitment : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள். 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 25 முதல் 35 வயதுடைய 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ஆகியோருக்கு வயது வரம்பு 25 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வரை வயது உச்சவரம்பு வரையறை செய்யப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
அதேபோன்று, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு, 20 முதல் 40 வயதுடைய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி.எஸ்டி வகுப்பினர் ஆகியோருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வரை வயது உச்சவரம்பு வரையறை செய்யப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள்மையம் அமைந்துள்ள அதே வார்டு (அ)அருகிலுள்ள வார்டு (அ) மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன.?
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் (Block, Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குடும்ப அட்டை / ஆதார் அட்டை சாதிச்சான்று. வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு மட்டும் அனுமதி
விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களுடன் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் வாடி உதவியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டு, தொடர்ந்து பன்னிரண்டு மாத காலம் பணியினை முடித்தபின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.
மாத ஊதியம் எவ்வளவு.?
தேர்ந்தெடுக்கப்படும் அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7700-ம் குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700-ம், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100/ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தொடர்ந்து பன்னிரண்டுமாத காலம் பணியினை முடித்த பின் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.7700-24200 என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700-18000 என்ற விகிதத்திலும், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100-12500 என்ற விகிதத்திலும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
சென்னை மாவட்டத்தில் வட்டாரம் / திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும் அந்தந்த திட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.04.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை 23.04.2025-ம் மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments