Police vacancies will be filled soon : சட்டப்பேரவையில் காவல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருவதாகவும், 2020-21ம் ஆண்டு 10,329 காலி பணியிடங்களும், 2022ம் ஆண்டு 3271 காலிபணியிடங்களும், 2023ம் ஆண்டு 2599 காலி பணியிடங்கள் என மொத்தமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 16,199 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவலர் காலிப்பணியிடம்
மேலும், 2024- 25ம் ஆண்டு 2831 காலி பணியிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறிய அவர், விரைவில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியை பார்க்கும் போது திருப்திகரமாக இல்லை எனவும், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டதாகவும், காவல்துறை செயல்பாடு திமுக ஆட்சியில் அப்படி பார்க்க முடியவில்லை என கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
மூன்று ஆண்டுகளில் அனைத்து விதமான போதைப்பொருள் நடமாட்டம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், கொலை கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும், தமிழக மக்களைக் கேட்டால் அதிமுக ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள் என்றும் கூறினார்.
அதிமுகவிற்கு தகுதி இல்லை
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என கூறிய அவர், ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகுவைத்தவர்கள் அதிமுகவினர் எனவும், கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கு குறித்து பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்
0 Comments