சென்னை: நில ஆவணங்களை நவீனமயமாக்கும் ''நக்சா" திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லில் நில ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, புல வரைபடங்கள் உருவாக்கப்பட்டு சொத்து வரி தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை முழு நிலப்பகுதியும் சர்வே செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. இதை எடுத்து மறு நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே மத்திய அரசின் நிலம் வளங்கள் இயக்குனரகம், நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்ஷா திட்டம் மூலம் இந்தியா முழுவதும் மறு நில அளவீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ட்ரோன்களை பயன்படுத்தி நில அளவை புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி சொத்து வரி தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்க நக்ஷா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கி இருக்கிறது. திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரோன்களை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஆர்த்தோ ரெக்டிஃபைடு இமேஜ் உருவாக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நில அளவை செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் ''நக்சா" (NAtional geospatial Knowledge - based land Survey of Urban HAbitations - NAKSHA) திட்டத்தில் திண்டுக்கல் மாநகரம் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுார்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் பேணப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆளில்லா வானூர்தியை ( ட்ரோன்கள் )பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image-ORI) உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும். நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு(DGPS மற்றும் ETS) நில அளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும். நிலஅளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும். மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும். எனவே, "நக்சா" திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட நில உடமைதாரர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஏற்கனவே உள்ள நில ஆவணங்களுடன் புதிய டிஜிட்டல் நில ஆவணங்கள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் சொத்து மற்றும் நில ஆவணங்களை துல்லியமாக பெற முடியும். அதன் மூலம் வரி வசூலும் முறையாக நடக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
0 Comments