சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 15 லட்சம் கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் என்ன?. விண்ணப்பம் செய்வதற்கான முறைகள் என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு சார்பில் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள், ஆண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் சுயதொழில் செய்து பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது
தகுதிகள்: சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக குழுவில் 20 பேர் இருக்க வேண்டும். 20 பேர் கொண்ட குழுக்கள் ரூ. 15 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். அதிகபட்சமாக ஒரு உறுப்பினருக்கு ரூ. 1.25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இந்த தொகைக்கு ஆண்டு வட்டியாக 6 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு காலம் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் வகுப்பினர் மட்டும் பயனடையலாம். கடன் பெறுவோரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 18 முதல் 60 வரை வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை விண்ணபிப்பதற்கான ஆவணமாகும்.
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த துறையின் www.tabcedco.tn.gov.in இணையதளம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட, மத்திய, நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களிலும் இந்த கடன் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.
சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த தொகையை வழங்குவதற்கும், முறையாக வசூல் செய்வதற்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை துணை முகவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்கள் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பதாரர்களின் தகுதி, கடனை திரும்ப செலுத்துதற்கான திறன், செயல்பாடு, பின்புலம் ஆகியை குறித்து ஆய்வு செய்வதற்கு மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையில் இயங்கும் கூர்ந்தாய்வுக் குழுவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்
மேலும், இத்திட்டத்தில் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான தவணை உரிமை காலமாக 2 மாதங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தவணை தேதியில் கடனை செலுத்தவில்லை எனில் ஆண்டுக்கு 5 சதவீ அபராத வட்டி வசூலிக்கப்படும். கடன் வழங்கப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு கடன் தொகை அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை தவணையை திரும்ப செலுத்தும்போது வங்கிகளில் காட்ட வேண்டும் என்று துறை அதிகாரிகள தெரிவித்துள்ளனர்
0 Comments