அரசு ஊழியர்களுக்கு வீட்டுக்கடன், முன்பணம் வரம்பு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சமாகவும், மாநில அரசுஅலுவலர்களுக்கு ரூ.40 லட்சமாகவும் வீட்டுக்கடன் மற்றும் முன்பணம் உயர்த்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதித்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:
தமிழக அரசில் பணியாற்றும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள், மாநில அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசின் வீட்டுவசதித் துறை வாயிலாக வீட்டு மனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது முன்பணம் வழங்கப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு இந்தவீட்டுக்கடன் முன்பணம் மாற்றிஅமைக்கப்பட்டது. அதன்படி, அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.40 லட்சம், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டுமானத்துக்கான தொகை பெருமளவு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, மீண்டும் அதிகபட்ச முன்பணத்தொகையை நிர்ணயிக்க அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து, அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாகவும், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சம் ரூ.25லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அகில இந்திய சேவைப் பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாகவும், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சம் ரூ.25லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments