தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?

 தங்க நகைக்கடன்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒன்பது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன்.

ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.

ஏற்கெனவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்தைக் கடந்து ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் நிலையில், வாங்கிவைத்திருக்கும் நகையை அடகு வைக்கவும் புதுபுது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள 9 கட்டுப்பாடுகள் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கட்டுப்பாடுகள் என்ன?

  1. அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவிகித தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும்.

  2. அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

  3. நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

  4. குறிப்பிட்ட தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும். கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

  5. வெள்ளிப் பொருள்களுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  6. தனிநபர் ஒரு கிலோ வெள்ளி மட்டுமே அடகு வைக்க முடியும்.

  7. நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  8. 24 கேரட் நகைகளுக்கும் 22 கேரட் நகையின் மதிப்பு அடிப்படையிலேயே கடன் வழங்க வேண்டும்.

  9. அடகு வைக்கப்பட்ட நகையை திருப்புவதற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர் செலுத்திய 7 நாள்களுக்குள் நகையை திருப்பி அளிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியில்லா நிறுவனம், நகையின் உரிமையாளருக்கு தாமதமாகும் நாளொன்றுக்கு ரூ. 5,000 இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், நகைக்கடன் பெற்றவர்கள் மறு அடமானம் வைக்கும் முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதில், நகைக்கடனுக்கான அவகாசம் நிறைவு பெற்றது, மறு அடமானம் வைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, நகைக்கடன் பெற்றவர்கள் முழுத் தொகையையும் செலுத்தி மீட்ட பிறகே, அந்த நகையை மறு அடமானம் வைக்க முடியும் என்ற விதியை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

தற்போது நகையை அடகு வைக்கவே பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டிருப்பது சாமானிய மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது

Post a Comment

0 Comments