ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 05 அங்கன்வாடி பணியாளர், 01 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 04 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்
இந்த பணியிடங்களுக்கான வட்டார வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட திட்ட அலுவலகம், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகைகளில் வெளியிடப்படும். ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த பெண்கள் WWW.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்து நாட்கள் கால அவகாசம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 7, 2025 முதல் ஏப்ரல் 24, 2025 வரை (10 வேலை நாட்களுக்குள்), தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்டாரத்தின் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் ஊதிய விவரம்
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பன்னிரண்டு மாத காலம் நிறைவு செய்த பின்னர், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். அங்கன்வாடி பணியாளர் ரூ. 7700 - ரூ. 7700 - 24200, குறு அங்கன்வாடி பணியாளர் ரூ. 5700/- ரூ. 5700 - 18000, அங்கன்வாடி உதவியாளர் ரூ. 4100- ரூ. 4100 - 12500
தகுதிகள்
பொதுவான தகுதி: அனைத்து விண்ணப்பதாரர்களும் பெண்களாக இருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியான மாதத்தின் முதல் தேதியின்படி கணக்கிடப்படும்.
அங்கன்வாடி பணியாளர் - குறு அங்கன்வாடி பணியாளர்
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொதுப் பிரிவினர்: 25 முதல் 35 வயது வரை.
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர்: 25 முதல் 40 வயது வரை.
மாற்றுத்திறனாளிகள்: 25 முதல் 38 வயது வரை.
இருப்பிடச் சான்று:
காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்திற்கு விண்ணப்பிப்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினர்: 20 முதல் 40 வயது வரை.
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர்: 20 முதல் 45 வயது வரை.
மாற்றுத்திறனாளிகள்: 20 முதல் 43 வயது வரை.
இருப்பிடச் சான்று: அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அதே இருப்பிடச் சான்று நிபந்தனைகள் பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் (தாய் / தந்தை இறப்புச் சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களையும் இணைக்க வேண்டும். மேலும் நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
0 Comments