சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்நுகர்வானது தினசரி காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாகவும் மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது. இதனால், தொழிற்சாலைகள் போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ‘பீக் ஹவர் சார்ஜ்’ எனப்படும் உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் உச்சநேர மின்கட்டணமாக, ஒரு யூனிட் கட்டணத்துடன், 25 சதவீதம் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உச்சநேரம், சலுகை நேரம் மற்ற நேர மின்பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க டிஓடி எனப்படும் ‘டைம் ஆஃப் தி டே’ மீட்டர் பொருத்தப்படுகிறது.
இந்த மீட்டர் உயரழுத்தப் பிரிவில் இடம்பெறும் மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வழுத்த பிரிவில் சிறு தொழில்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் உச்சநேர மின்பயன்பாடு இடம் பெறுகிறது.
இந்த மின்இணைப்புகளில் டிஓடி மீட்டர் பொருத்தப்படும் வரை மொத்த மின்பயன்பாட்டு கட்டணத்துடன் சேர்த்து 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்க 2022-ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வசூலிக்கப்படுகிறது. பலர் இரவில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு சலுகை கேட்கின்றனர். எனவே, இதுவரை பொருத்தப்படாத மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கணக்கெடுக்கும் டிஓடி மீட்டர் பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது
0 Comments